Saturday, March 14, 2009

ஏப்ரல் 12, 2006.

இன்று..
என் பிறந்த நாள்..
என் அம்மாவுடனும் தோழிகளுடனும் கொண்டாடினேன். பரிசு கொடுக்க வந்த என் கிறிஸ்துவ தோழி மெட்டில்டா, இரக்கமற்ற இறைவனிடம் அம்மாவின் உடல் நலனுக்காக இறை அருள் வேண்டினாள். பின், அம்மா அவளின் கைகளை பற்றிக் கொண்டு. "ம்மா, அவளுக்குன்னு யாரும் இல்ல.. நீ தான் கூட பொறந்தவ மாதிரி பாத்துக்கணும். என் உடம்ப நெனச்சா எனக்கு பயமா இருக்குமா" என்று கண் கலங்கிய அந்த தருணத்தை, என் தோழி இன்றும் என்றும்' மறந்திருக்க மாட்டாள். முதன்முறையாக, பிறந்த நாள் அன்றுமாக அம்மாவை விட்டு தோழி உடன் உறங்கினேன்....

ஆனால், இன்றைய தினம் நான் கண் விழித்ததை என்னால் மறக்கவே முடியாது... "ராஜாத்தி" என்று அழைத்த படியே அம்மா, உறங்கி கொண்டிருந்த என்னை பின்பக்கமாக அணைத்து கொண்டாள். தலை கோதிய படியே, அவள் கொடுத்த முத்தம் நித்தமும் தித்திக்கிறது... நான் சிணுங்கிய படியே தலையினைலிருந்து என் அம்மாவின் மடிக்கு இடம் பெயர்ந்தேன். அரை தூக்கத்தில் இருந்து என்னை அள்ளி எடுத்து கொஞ்சினாள். கொஞ்சிய படியே துயில் எழுப்ப பட்ட நான்... எழுந்து அம்மாவின் அருகில் அமர்ந்து அழுத்தமான முத்தத்தை பதித்தேன்.

"என் அம்மா", "ராஜாத்தி" என்ற கொஞ்சல், சிணுங்கி கொண்டே விழிக்கும் அந்த உறக்கம்,அம்மாவின் மடியில் மட்டுமே கிடைக்கும் அந்த மயக்கம்.......

ம்ம்ம்...

ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் நான்....
அது எனக்கு கிடைக்கும்....!

No comments:

Post a Comment